search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை முயற்சி"

    • இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா களக்காடு போலீசில் புகார் செய்தார்.
    • கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணியை களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த 2017-ம் ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த கணபதி மனைவி ராணியிடம் (50) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ. 2,500 வட்டி செலுத்தி வந்தார்.

    இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என தெரிகிறது. இதனைதொடர்ந்து ராணி, இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார்.

    இதனைதொடர்ந்து இசக்கி ராணியிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு ராணி வட்டி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே கந்து வட்டி கேட்டு மிரட்டி, மனைவியை அவதூறாக பேசியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவில் இசக்கி திடீர் என விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது.

    இதனிடையே கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணியை களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான ராணி காங்கிரஸ் பிரமுகர் ஆவார்.

    • பெண் இசக்கியிடம் அவரது மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது
    • தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). தொழிலாளி.

    இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ.2,500 வட்டி செலுத்தி வந்தார். இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அந்த பெண் இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம்(25) வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார்.

    இதனைதொடர்ந்து இசக்கி அந்த பெண்ணிடம் இதுபற்றி கேட்டார். அப்போதும் அந்த பெண் இசக்கியிடம் அவரது மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கி களக்காடு போலீசிலும் புகார் செய்தார்.

    இதற்கிடையே மனைவியை அவதூறாக பேசியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று இரவில் இசக்கி திடீரென விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது. கடன் தகராறில் பெண், மனைவி குறித்து ஆபாசமாக பேசியதால் மனம் உடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மாடுகளை தங்களது வீடு முன்பு கட்டி போடுவதால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ் .பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேலன்.தொழிலாளியான இவர் இன்று காலை மனைவி சுமதி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீரென மண்எண்ணையை மனைவி, குழந்தை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தாங்கள் குடியிருக்கும் வழிப்பாதையை பக்கத்தை வீட்டை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாங்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மாடுகளை தங்களது வீடு முன்பு கட்டி போடுவதால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு மற்றும் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அசோக்குமார் வீட்டுக்கு அனுப்பும்படி போதைமறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டார்.
    • சமையல் அறைக்கு சென்ற அசோக்குமார் திடீரென அங்கிருந்த கத்தியால் தனது வயிற்றில் தனக்குத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

    திருநின்றவூர்:

    ஆவடி, சிந்து நகரில் தனியார் போதை மறுவாழ்வு செயல்பட்டு வருகிறது. இங்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அசோக்குமார் என்பவர் கடந்த வாரம் சிகிச்சைக்கு வந்தார். அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அசோக்குமார் வீட்டுக்கு அனுப்பும்படி போதைமறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டார். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் அசோக்குமாரை அங்கேயே தங்கி சிகிச்சை பெறும்படி வலியுறுத்தினர். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

    இதற்கிடையே அங்குள்ள சமையல் அறைக்கு சென்ற அசோக்குமார் திடீரென அங்கிருந்த கத்தியால் தனது வயிற்றில் தனக்குத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சிஅடைந்த போதைமறுவாழ்வு மைய அதிகாரிகள் அவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆவடி போலீசார் போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இருவரும் படுத்து தூங்கும் பொழுது தண்டபாணி என் மகள் அனுசுயாவை முதலில் வெட்டி உள்ளார்.
    • அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்ட கணவர் சுபாஷ் தந்தையை தடுக்கச் சென்றபோது சுபாஷின் கழுத்தில் தண்டபாணி வெட்டி உள்ளார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவ கொலையில் வெட்டுப்பட்டு காயம் அடைந்த அனுசுயா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அனுசுயாவின் தாய் அனிதா உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மகள் அனுசுயா காதல் திருமணம் செய்து கொண்டதாக அவர் கணவர் சுபாஷ் உடன் இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்த போது தான் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியும்.

    அதனால் இருவருக்கும் மீண்டும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தோம். பின்னர் எங்களிடமே இருவரையும் இருக்க சொன்னோம். ஆனால் சுபாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்தார்.

    சுபாஷின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. அதனால் உங்களை நம்பி என் பெண்ணை அனுப்ப முடியாது. நீங்கள் மட்டும் தனியாக சென்று வாருங்கள் என்று கூறினோம். அதற்கு சுபாஷ் உங்கள் பொண்ணை திருமணம் செய்து விட்டு செல்வதற்காகவா வந்தோம்.

    என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று சொல்லி கிருஷ்ணகிரிக்கு அழைத்து செல்வதாக கூறினார். உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தான் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தோம்.

    கிருஷ்ணகிரி அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் தினமும் அனுசுயாவின் அம்மா அனிதாவிற்கு போன் செய்து நலமுடன் இருப்பதாக 20 நாட்களாக தெரிவித்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் நான் போன் செய்து சுபாஷை கேட்டபோது என் தந்தை எங்கள் இருவரையும் போன் செய்து வர சொன்னார்.

    அதனால் வந்தோம். எங்கள் இருவரையும் என் அப்பா மனசார ஏற்றுக் கொண்டார். இப்போது தான் சாப்பிட்டு விட்டு அமர்ந்துள்ளோம் என தெரிவித்தார்.

    அதனால் அவர் கூறியதை நம்பி நாங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மாலை எங்கள் வீட்டிற்கு செல்கிறோம் வேலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    சுபாஷின் தந்தை தண்டபாணி இன்று ஒரு நாள் தங்கி விட்டு நாளை காலை சென்று விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அதனை நம்பி இருவரும் படுத்து தூங்கும் பொழுது தண்டபாணி என் மகள் அனுசுயாவை முதலில் வெட்டி உள்ளார். அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்ட கணவர் சுபாஷ் தந்தையை தடுக்கச் சென்றபோது சுபாஷின் கழுத்தில் தண்டபாணி வெட்டி உள்ளார்.

    பின்னர் தடுக்க வந்த பாட்டியையும் வெட்டி உள்ளார். என் பெண்ணை வெட்டிய பிறகு என் பெண்ணை யார் காப்பாற்றினார்கள் என்னவென்று எங்களுக்கு தெரியாது. என் பெண்ணிற்கு கழுத்து, கால், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உள்ளார்.

    நாங்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என் பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று எங்களிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் நம்பி வரவழைத்து வெட்டி விட்டார்களே என்று அழுதபடி கூறினார். 

    • போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தண்டபாணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • மருத்துவமனையில் குணமடைந்த பிறகு தண்டபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது50). தையல் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி.

    இவர்களுக்கு பவித்ரா, சுஜி என்ற 2 மகள்களும், சுபாஷ் (25) என்ற மகனும் உள்ளனர். இதில் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுபாஷ்க்கும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதனால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் சுபாஷ், அனுசுயாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியை தனியாக தங்க வைத்து விட்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை தண்டபாணி காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாசை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதனை தடுக்க வந்த கண்ணம்மாளுக்கும் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. இதில் சுபாஷ், அவருடைய பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் இறந்தனர்.

    ஆனாலும் ஆத்திரம் அடங்காத தண்டபாணி அரிவாளால் மருமகள் அனுசுயாவையும் வெட்டினார்.

    இதில் அனுசுயா சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 3 பேரையும் வெட்டிய தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சுபாஷ், கண்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த அனுசுயாவை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக இன்றுகாலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதையடுத்து கொலையாளியை பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    அப்போது ரத்தக்கறை ஆடையுடன் தண்டபாணி ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார்.

    அங்கு துக்கம் தாங்காமல் தண்டபாணி தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஊத்தங்கரை நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தனிப்படை போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குற்றவாளி தண்டபாணியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தண்டபாணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் குணமடைந்த பிறகு தண்டபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சுரேசின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு, குறுந்தகவல்கள் வந்துள்ளன.
    • போலீஸ் நிலையத்தில் சரண் அடையுமாறும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். தொழிலாளி.

    இவருக்கும், காடுகோடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பெண்ணின் வீட்டினருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள், சுரேஷ் மீது பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சுரேசின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு, குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதில் போலீஸ் நிலையத்தில் சரண் அடையுமாறும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பயந்து போன சுரேஷ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். முன்னதாக அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் தனது சாவுக்கு காரணம் இளம்பெண் தான் எனவும், தான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும், அவர் விஷத்தை குடித்தும், பீர் பாட்டிலால் தலையில் தன்னை தானே தாக்கி கொண்டதும் அதில் பதிவாகி இருந்தது.

    அந்த வீடியோ காட்சிகளை பார்த்து உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சர்ஜாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×